சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
பக்தர்.: எந்த விதத்தில் சந்தோஷம் நமது உண்மைத் தன்மை?
மகரிஷி.: பூரண பேரானந்தம் தான் பிரம்மன் (ஆன்ம சொரூபம்). பூரண அமைதி உண்மை சொரூபத்தினுடையது தான். ‘அது’ மட்டுமே உள்ளது, உணர்கிறது. உடலுக்கு அப்பால் சார்ந்ததை மதிப்பிட்டாலும், பக்தி மார்க்கத்தில் ஊகித்து உய்த்துணர்ந்தாலும், இதே தீர்மானம் தான் அடையப்படுகிறது.
நாம் பேரானந்தத்திற்காக கடவுளை வணங்கி, அருளினால் அதைப் பெறுகிறோம். பேரானந்தத்தை வழங்குபவர் பேரானந்தமாகவே தான் இருக்க வேண்டும்; எல்லையற்றதாகவும் இருக்க வேண்டும். எனவே ஈஸ்வரர், எல்லையற்ற சக்தியும் பேரானந்தமும் கொண்ட தனிப்பட்ட கடவுளாவார். பிரம்மன் (ஆன்ம சொரூபம்), பொதுமுறையான, வரையற்ற பேரானந்தமாகும். தங்கள் ஆதாரத்தை பிரம்மனிடமிருந்தும், பின்னர் ஈஸ்வரரிடமிருந்தும் தருவித்துக்கொண்ட வரையறுக்கப்பட்ட தான்மைகள், தம்முடைய ஆன்மீக தன்மையில், பேரானந்தமே தான். உயிரியலில், ஒரு உயிர்ப்பிராணி, சில செயல்பாடுகள் சந்தோஷம் அளிப்பதால், அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது.
இன்பம் தான் நமது வளர்ச்சிக்கு உதவுகிறது : அதாவது, உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, மற்றும் மனதுக்கினிய குணங்கள். மனவியல், மனதுக்கு அப்பாற்பட்டது, இவற்றைப் பொருத்தவரை, இன்பம் என்பதை பின்வருமாறு சொல்லலாம்: நமது தன்மை, முதல்நிலையாக, ஒன்றே ஒன்று, பூரணமானது, பேரானந்தமானது. ஒரு நிகழக்கூடிய அனுமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மொத்தமான கடவுள் தன்மை, கடவுளாகவும் இயற்கையாகவும் பிரிக்கப்படுவது தான் படைப்பு என்பதாகும். இயற்கை அல்லது மாயை இரண்டு பகுதிகள் கொண்டதாகும் : பரம் – ஆதாரம் அளிக்கும் சாராம்சம்; அபரம் – ஐந்து தனிமங்கள், மனம், புத்தி, தான்மை – இவை எல்லாம் சேர்ந்து மொத்தம் எட்டு அம்சங்கள்.
தான்மையின் பூரணத்துவம் திடிரென்று ஒரு இடத்தில் உடைக்கப்படுகிறது. அப்போது, ஒரு பொருளைப் பெறவோ அல்லது ஒன்றைச் செய்யவோ ஆசை எழச்செய்யும் ஒரு விருப்பம் அல்லது தேவை ஏற்பட்டு உணரப்படுகிறது. எழுந்த ஆசை நிறைவேறியதால் அந்த விருப்பம் தீர்க்கப்படும்போது, தான்மை சந்தோஷம் அடைகிறது; முதலிலிருந்த பூரணத்துவம் திரும்பி பெறப்படுகிறது. எனவே, சந்தோஷம் என்பது நமது இயல்பான குணம் அல்லது தன்மை என்று சொல்லலாம்.
இன்பமும் துன்பமும், தனித்து இல்லாமல் இன்னொன்றுடன் ஒப்பு நோக்கியே காணத்தக்கவை; அவை நமது வரையறுக்கப்பட்ட நிலையைக் குறிப்பிடுகிறது. தேவைகள் திருப்தியடையும்போது, அது வளர்கிறது. மற்றவற்றுடன் சார்ந்து உள்ள வளர்ச்சி நிறுத்தப்படும்போது, அதாவது ஜீவனானது பூரண அமைதியை தன்மையாக உடைய பிரம்மத்தில் ஒன்றுபடும்போது, அந்த ஜீவன் மற்றவற்றுடன் சார்ந்து உள்ள தற்காலிகமான இன்பத்தை உணர்வது நின்று விடுகிறது; பின் அது பூரண அமைதி, பேரானந்தம் அனுபவிக்கிறது. எனவே ஆன்ம ஞானம் தான் பேரானந்தம். அது ஆன்ம சொரூபத்தை அளவற்ற ஆன்மீக கண்ணாக (ஞான திருஷ்டியாக) உணர்வதாகுமே தவிர, அது மனக்கண் தொலைகாட்சி இல்லை. அது எல்லாவற்றிலும் உயர்வான சுய சரணாகதியாகும். சம்சாரம், அதாவது உலக-சுழற்சி, துயரம் தான்.
பக்தர்.: சம்சாரம் – அதாவது, படைப்பும், வரையறுக்கபட்ட தோற்றப்பாடும் – ஏன் துயரமும் தீவினையும் நிறைந்ததாக உள்ளது?
மகரிஷி.: கடவுளின் ஆதீனம், தெய்வீக இச்சை!
பக்தர்.: கடவுள் ஏன் இப்படி ஆதீனம் செய்கிறார்?
மகரிஷி.: அது அறிவுக்கு எட்டாதது. அந்த சக்திக்கு குறிக்கோள் எதையும் குறிப்பிட முடியாது. இச்சையும், சாதிக்க ஒரு நோக்கமும், அந்த வரையரையில்லாத, எல்லாம் அறிந்த, மிகவும் அதிகமான சக்தி கொண்ட உள்ளமைக்கு சாற்ற முடியாது. கடவுள் தமது முன்னிலையிலேயே நடக்கும் நடவடிக்கைகளால் தொடப்படுவதில்லை. கதிரவனையும் உலக நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பாருங்கள். அந்த மாபெரும் ‘ஒன்று’ பலவாக ஆவதற்கு முன், ‘அதற்கு’ ஒரு குறிக்கோளும் பொறுப்பும் சாற்றுவதில் அர்த்தம் இல்லை.
ஆனாலும், நடக்கப்போகும் நடவடிக்கைகளின் முறைபாட்டிற்கு, கடவுளின் இச்சை காரணம் என்பது சுயேச்சையை பற்றிய பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாகும். நமக்கு நடக்கும் குறையுள்ள, திருப்தியற்ற நிகழ்ச்சிகளால், அல்லது, நம்மால் செய்யப்பட்டவை, செய்யப்படாதவை இவற்றால், மனம் அமைதி இல்லாமல் அலைபாயும்போது, சுயேச்சையையும் நமது பொறுப்புணர்ச்சியையும் விட்டு விடுவது விவேகம். எல்லாம்-அறிந்த, எல்லாம்-வல்ல கடவுளால் நியமிக்கப்பட்ட கருவிகளாக நம்மைக் கருதிக்கொண்டு, கடவுளின் இச்சைப்படி நடக்கவும் சகிக்கவும் செய்வது விவேகம். அவர் எல்லா சுமைகளையும் பாரங்களையும் சுமந்துக் கொண்டு, நமக்கு மன அமைதி அளிக்கிறார்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 28.
28d
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா