விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (15)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (13)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14)

(14)

பக்தர்:  

சந்நியாசத்தின் அல்லது துறவின் உண்மையான நோக்கம் என்ன?

மகரிஷி:

சந்நியாசம் (துறவு) என்பது ‘நான்’ எண்ணத்தின் துறவு தானே தவிர, வெளிப்புற பொருட்களை நிராகரிப்பது இல்லை.

‘நான்’ எண்ணத்தைத் துறந்த ஒருவர், தனியாக இருந்தாலும், உலக வாழ்வான சம்சாரத்தின் நடுவில் இருந்தாலும், ஒரே மாதிரி தான் விளங்குகிறார்.

மனம் ஒரு பொருளின் மீது ஆழ்ந்த கவனத்தில் இருக்கும் போது, மற்ற பொருட்கள் அருகில் இருந்தால் கூட எப்படி அந்த மனம் அவற்றைக் காண்பதில்லையோ, அதே போல், ஞானி எத்தனை உலகம் சார்ந்த செயல்கள் செய்தாலும், உண்மையில் அவர் ஒன்றும் செய்வதில்லை. ஏனெனில்,  அவர் தனது மனதை, ‘நான்’ எண்ணம் எழ விடாமல்,  சுய சொரூபத்தில் தங்க வைக்கிறார்.

எப்படி ஒருவர், உண்மையில் நகராமல் இருந்தாலும், கனவில் தலை கீழாக கீழே விழுவது போல் கனவு காண்கிறாரோ, அதே போல், ‘நான்’ எண்ணத்தை நிறுத்தாத ஓர் அக்ஞானி (ஆன்மாவை அறியாதவர்), தனிமையில் இடைவிடாது ஆழ்நிலை தியானம் செய்தாலும், உண்மையில் அவர் எல்லா உலகம் சார்ந்த செயல்களையும் செய்கிறார்.* இவ்வாறு ஞானமுள்ளவர்கள் சொல்லியுள்ளனர்.

* கவனத்தை எங்கோ வைத்துக் கொண்டு ஒரு கதையை கேட்கிறவர்கள் போல, பூர்வ மனப்போக்குகள் முற்றிலும் அகற்றப்பட்ட மனம், பார்ப்பதற்கு செயல்படுவது போல் தோன்றினாலும், உண்மையில் செயல்படுவது இல்லை. பூர்வ மனப்போக்குகள் அகற்றப்படாத மனம், பார்ப்பதற்கு செயல்படாமல் இருந்தாலும், அது உண்மையில் செயல்படுகிறது. இது, ஒருவர் நிலையாக இருக்கும் போதும், கனவுகளில் தாம் மலை மீது ஏறி அங்கிருந்து கீழே விழுவதாகக் கற்பனை செய்துக் கொள்வது போலாகும். 

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (15)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (13)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (14)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!