Arunachala
அருணாசலத்தில் ரமணரின் வாசம்
மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்

அருணாசலத்திற்கு பயணம்

 

ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி, இலக்கணத்தின் பாடம் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வெங்கடராமனுக்கு இவை எல்லாவற்றிலும் உள்ள பயனற்ற தன்மை திடீரென்று உறைத்தது. பாட காகிதங்களை தள்ளி வைத்து விட்டு, ஆழ்ந்த சிந்தனையில், தியானத்தில் அமர்ந்தார். அவரை கவனித்துக் கொண்டிருந்த அவரது சகோதரர் நாகஸ்வாமி, சிறிது கடுமையாக ரமணரிடம், “இத்தகைய பெரிய மனிதருக்கு இதெல்லாம் என்ன பயன்?” என்று சொல்லி கேலி செய்தார். ரமணர் சகோதரரின் குற்றச்சாட்டின் உண்மையை புரிந்துக் கொண்டார். ரகசியமாக வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லி விட்டு, எழுந்து வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார். கல்லூரியின் கட்டணத்தை கட்டுவதற்காக அவரது சகோதரர் ரமணரிடம் ஐந்து ரூபாய் கொடுத்திருந்தார். அவரை அறியாமல் அவரது பயணத்திற்கு இந்த பணம் அளிக்கப்பட்டதாக அமைந்தது. வெங்கடராமன் மூன்று ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற இரண்டு ரூபாயை பின்வரும் இறுதிக் கடிதத்துடன் வைத்தார். இந்த கடிதத்தில் தம்மை அவர் “இது” என்று குறிப்பிடுவது, உடலுடன் இணையாது, தூய ஆன்மாவில் ஆழ்ந்திருக்கும் அவரது அமைதி பூர்வமான நிலையை நமக்கு அறிவிக்கிறது.  

“நான் எனது தந்தையைத் தேடி, அவரது ஆணைக்கு கீழ்படிந்து இங்கிருந்து கிளம்பி விட்டேன். இது ஒரு ஒழுக்கம் நிறைந்த நற்செயலில் தான் துவங்கியுள்ளது. அதனால் எவரும் இந்த விஷயத்தைப் பற்றி விசனப் பட வேண்டாம். இதைத் தேடி கண்டுபிடிக்க பணம் ஏதும் செலவழிக்க வேண்டாம். உனது கல்லூரியின் கட்டணம் இன்னும் கட்டப் படவில்லை. இந்த கடிதத்துடன் இரண்டு ரூபாய் உள்ளது. இப்படிக்கு, _______________ “

அருணாசலத்திற்கு செல்லும் பயணத்தில் இறைபொருள் வெங்கடராமனுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது. ஏனெனில், அவர் ரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்தடைந்த போதும், ரயிலும் தாமதமாக வந்தது. திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் இடம் திண்டிவனம் என்று ஒரு பழைய வரைபடம் ஒன்றில் குறிக்கப்பட்டிருந்ததால், திண்டிவனத்திற்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டார். அவருக்கு பக்கத்தில் ரயிலில் இருந்த ஒரு வயதான முகம்மதிய மௌல்வி, இந்த புனிதமான இளைஞர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருப்பதைக் கவனித்தார். மெதுவாக இளைஞருடன் உரையாடல் செய்த போது, அவரிடம் திருவண்ணாமலைக்கு விழுப்புரத்திலிருந்து ஒரு புது ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளதாக மௌல்வி அறிவித்தார்.

விடிகாலையில் சுமார் மூன்று மணிக்கு ரயில் விழுப்புரத்தை வந்து சேர்ந்தது. வெங்கடராமன் மீதி இருந்த தூரத்திற்கு நடந்து செல்ல முடிவு செய்தார். திருவண்ணாமலைக்குச் செல்லும் பாதையைத் தேடிக்கொண்டு அவர் ஊருக்குள் சென்று அலைந்தார். அவருக்கு பசித்தது. ஒரு உணவு விடுதிக்கு சென்று கேட்டபோது, அவரை பகல் வரையில் காத்திருக்கும்படி சொன்னார்கள். உணவகத்தின் உரிமையாளர், அறிவும் ஒளியும் மிகுந்த முகமும், காதில் பொன் தோடுகளும், அடர்ந்த கருமை நிற கூந்தலும் கொண்ட இந்த மேன்மை மிகுந்த இளைஞரை மிக்க ஆவலுடன் உன்னிப்பாக கவனித்தார். உணவு ஏற்றுக் கொண்ட பின் அதற்காக இளைஞர் இரண்டு அணாக்கள் அளித்தார். ஆனால், உரிமையாளர் ஏற்க மருத்தார். அதற்கு பிறகு உடனடியாக வெங்கடராமன் ரயில் நிலையத்துக்குச் சென்று மாம்பழப்பட்டுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டார். ஏனெனில், அவரிடம் இருந்த காசுக்கு அவ்வளவு தூரம் செல்ல தான் டிக்கட் கிடைத்தது.

பிற்பகலில் அவர் மாம்பழப்பட்டை வந்தடைந்தார். அங்கிருந்து அவர் திருவண்ணாமலைக்கு நடந்து செல்ல துவங்கினார். மாலையில் திருக்கோவிலூருக்கு அண்மையில் வந்து சேர்ந்தார். அருகில், உயர்ந்த பாறையின் மீது கட்டப் பட்ட அரையணிநல்லூர் கோவிலிலிருந்து, வெகு தூரத்தில், அருணாசல மலை, நிழல் போல தெரிவதை அவர் அறியவில்லை. அதனால் கோவிலுக்குள் சென்று அமர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு அற்புத காட்சி தோன்றியது. அந்த இடம் முழுவதும் பிரகாசமான ஒளியினால் நிரம்பி பரவிய காட்சி தோன்றியது. ரமணர் அந்த ஒளியின் மூலத்தை உட்பிரகாரத்தில் தேடினார். ஆனல் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒளி மறைந்து விட்டது.

வெங்கடராமன் தொடர்ந்து ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். கோவிலின் அர்ச்சகர்கள் கோவிலைப் பூட்டிச் செல்ல வந்தபோது, அது அவரது ஆழ்நிலையை பாதித்தது. அர்ச்சகர்களை அடுத்த கோவிலுக்கு பின் தொடர்ந்து சென்று, அங்கு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். தங்கள் காரியங்களை முடித்த பின்னர் மறுபடியும் அர்ச்சகர்கள் அவரை தொந்தரவு செய்தனர். அவர்களிடம் அவர் உணவு வேண்டியபோது, அவர்கள் மறுத்தனர். கோவிலில் மத்தளம் வாசிப்பவர் தமது உணவை அளிக்க முன் வந்தார். வெங்கடராமன் சிறிது தண்ணீர் கேட்டபோது, அதற்காக அருகில் உள்ள வீட்டுக்குச் செல்லும்படி அர்ச்சகர்கள் கூறினர். அங்கே போகும் வழியில், அவர் மயக்கத்தால் கீழே விழுந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் எழுந்த போது, அவரை ஒரு சிறு கும்பல் வேடிக்கைப் பார்ப்பதை உணர்ந்தார். சிறிதளவு தண்ணீர் அருந்தி, சிறிதளவு உணவு உண்டு, பிறகு மீண்டும், படுத்து தூங்கினார்.

மறுநாள் காலை கோகுலாஷ்டமி என்னும் கண்ணபிரானின் பிறந்த நாளாகியது. வெங்கடராமன் தமது பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் திரு முத்துக்கிருஷ்ண பாகவதர் என்னும் சீலரின் இல்லத்தை அடைந்தார். வீட்டின் மேன்மையான இல்லத்தரசி அவருக்கு மிக சிறந்த உணவு அளித்து, பகல் வரை அங்கு வைத்து பராமரித்தார். அதற்கு பிறகு, வெங்கடராமன் தமது பொன் தொடுகளைப் அவர்களிடம் பணயம் வைத்து, கடன் தரும்படி விண்ணப்பம் செய்தார். இல்லத்து தம்பதிகள் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர். வீட்டின் தலைவி கண்ணபிரானுக்காக செய்த பண்டங்களை ஒரு பெரிய பொட்டலத்தில் அவருக்கு அளித்தார். ரயில் நிலையத்துக்கு வந்த வெங்கடராமன், ரயில் அடுத்த நாள் வரை கிடையாது என்று அறிந்துக் கொண்டு, இரவை ரயில் நிலையத்திலேயே கழித்தார்.

வீட்டை விட்டு அகன்று மூன்று நாட்கள் ஆகிய பிறகு, வெங்கடராமன் திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு வந்த சேர்ந்தார். மனம் மகிழ்ச்சியால் துடிதுடிக்க, அதி வேகமாக நேராக மாபெரும் கோவிலுக்கு விரைந்தார். அவரை வரவேற்பது போல, உயர்ந்த மூன்று சுவர்களின் வாயிற்கதவுகளும், உட்பிரகாரம் உள்பட மற்ற எல்லா கதவுகளும் அகல திறந்திருந்தன. கோவிலுக்குள் யாருமே இல்லை. அதனால் அவர் தனியாக உட்பிரகாரத்தினுள் நுழைந்து, தமது மேன்மை மிகுந்த புனிதமான தந்தை திரு அருணாசலருக்கு முன்பு உணர்ச்சி வேகம் ஆட்கொண்ட நிலையில் நின்றார். இறைவா, நீங்கள் அழைத்ததால் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக் கொண்டு உங்கள் விருப்பப்படி என்னை நடத்திக் கொள்ளுங்கள்.”

அருணாசலத்தில் ரமணரின் வாசம்
மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்
அருணாசலத்திற்கு பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!