விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (10)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (8)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (9)

(9)

பக்தர்:  

இதயம் அல்லது உள்ளம் என்பது, பிரம்மன் என்னும் வரையற்ற மெய்மையைத் தவிர வேறில்லை என்று எப்படி சொல்ல முடியும்?

மகரிஷி:

ஆன்மா தனது அனுபவங்களை, கண்களில் உறையும் விழிப்பிலும், தொண்டையில் உறையும் கனவிலும், இதயத்தில் உறையும் ஆழ்ந்த தூக்கத்திலும் அனுபவித்தாலும்,  உண்மையில், அது தனது பிரதானமான இருப்பிடமான இதயத்திலிருந்து ஒரு போதும் விலகுவதில்லை. எல்லாமும் ஆன இதயக் கமலத்தில், அதாவது தூய மன மண்டலப் பிரதேசத்தில், அந்த ஆன்மாவின் ஒளி “நான்” என்னும் உருவத்தில் பிரகாசிக்கிறது.

இவ்வாறு அது எல்லோரிலும் பிரகாசிப்பதால், இந்த ஆன்மாவே சாட்சி என்றும், எல்லாவற்றையும் கடந்தது (துரீயம், அதாவது நான்காவது நிலை) என்றும் குறிப்பிடப் படுகிறது.  

எல்லா உடல்களிலும், ஒளியின் உட்பகுதியில்,  “நான்” என்ற உருவத்தில் பிரகாசிக்கும், “நான்” என்று இல்லாத மிக்க உயர்ந்த பிரம்மன் என்னும் வரையற்ற மெய்மை தான் சுய சொரூப மண்டலப் பிரதேசம். அது மட்டுமே தான் வரையற்ற மெய்மை. இது தான்  எல்லாவற்றையும் முற்றிலும் கடந்த மெய்மை.  

எனவே, இதயம் என்று சொல்லப்படுவது பிரம்மன் என்ற வரையற்ற மெய்மையே தான் என்று சொல்லப்படுகிறது. மேலும், பிரம்மன் எல்லா ஜீவன்களின் இதயங்களிலும் ஆன்மாவாகப் பிரகாசிப்பதால், பிரம்மனுக்கு “இதயம்” என்ற பெயர் கொடுக்கப் படுகிறது.  *

இருதயம் (இதயம்) என்ற சொல்லின் பொருள், ஹ்ருத் + அயம் என்று பிரிக்கப் படும்போது, அது உண்மையில் பிரம்மன் என்னும் வரையற்ற மெய்மை தான்.

எல்லா ஜனங்களும் “நான்” என்று சொல்லும் போது தமது மார்பைச் சுட்டிக்காட்டி தம்மைக் குறிப்பிடுகின்றனர்.   ஆன்மாவாக பிரகாசிக்கும் பிரம்மன், எல்லா ஜனங்களின் இதயங்களிலும் விளங்குகிறது என்பதற்கு இதுவே போதிய அத்தாட்சியாகும். 

* – “எல்லா தனிப்பட்ட ஜீவன்களின் இதயங்களிலும் பிரகாசிப்பது பிரம்மனாகும். எனவே அது இதயம் என்று சொல்லப்படுகிறது” – பிரம்ம கீதா.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (10)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (8)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!