விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (11)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (9)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (10)

(10)

பக்தர்:  

முழு பிரபஞ்சமும் மனதின் உருவாக இருந்தால், பிறகு பிரபஞ்சம் ஒரு மாயை தான் என்று பொருளில்லையா? அப்படியானால், பிரபஞ்சத்தின் படைப்பு வேதத்தில் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?

மகரிஷி:

பிரபஞ்சம் ஒரு வெறும் மாயை தான் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை. காட்சியளிக்கும் பிரபஞ்சம் பொய்யானது என்று காண்பித்த பின், மெய்யான பிரம்மனை அறிய வைப்பது தான் வேதத்தின் பிரதானமான கருத்து. இந்த காரணத்திற்காகத்தான் வேதங்கள் பிரபஞ்சத்தின் படைப்பை ஏற்றுக் கொள்கின்றனவேயன்றி, வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லை.

மேலும், குறைந்த தகுதி பெற்ற மனிதர்களுக்கு, படைப்பு அல்லது சிருஷ்டி கற்பிக்கப்படுகிறது : அதாவது, பிரகிருதி அல்லது மூலாதார இயல்பு, மஹத் தத்வம் அல்லது மகா புத்தி, தன்மாத்திரங்கள் அல்லது நுண்ணிய சாராம்சங்கள், பூதங்கள் அல்லது  புலன் சார்ந்த தனிமங்கள், உலகம், உடல், இவை போன்றவற்றின்  படிப்படியான  வளர்ச்சி, பிரம்மனிலிருந்து படைக்கப்படுவதாக கற்பிக்கப்படுகிறது.

ஆனால் இன்னும் மிகுந்த தகுதி பெற்றவர்களுக்கு, ஒரே சமயத்தில் நேரும் படைப்பு கற்பிக்கப்படுகிறது : அதாவது, ஒருவர் தமது ஆன்ம சுய சொரூபத்தை உணராத குறையால் தூண்டப்பட்டு தோன்றும் எண்ணங்களால், இந்த உலகம் ஒரு கனவு போல எழுந்தது என்று கற்பிக்கப்படுகிறது.

எனவே, உலகத்தின் படைப்பு பல விதங்களில் வர்ணிக்கப்பட்டுள்ள விஷயத்தால், வேதங்களின் பொருள் அல்லது குறிக்கோள், ஏதாவது ஒரு விதத்தில் பிரபஞ்சத்தின் மாயையான தன்மையைக் காண்பித்து,  பிறகு பிரம்மனின் உண்மையான தன்மையை கற்பிப்பதில் தான் பொருந்தியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. உலகம் மாயையானது என்பதை, தமது பேரானந்த சுய தன்மையின் அனுபவ உருவில் உள்ள ஞான நிலையில், ஒவ்வொருவரும் நேரடியாக  அறிந்துக் கொள்ளலாம்.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (11)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (9)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!