விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (4)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (2)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)

 

(3)

பக்தர்:  

“நான் யார்?” என்று ஒருவர் விசாரணை செய்வது எப்படி?

மகரிஷி:
‘போவது’, ‘வருவது’ போன்ற செயல்கள் எல்லாம் உடலைச் சார்ந்தவையன்றி வேறில்லாததால், உடலே  தான் “நான்” என்று சொல்வது போல தெரிகிறதில்லையா? பிறப்பதற்கு முன்னால் உடலே இல்லாததாலும், பஞ்ச பூதங்களால் ஆன, ஐந்து தனிமங்களால் உருவாக்கப்பட்டதாலும், ஆழ்ந்த தூக்கத்தில் இல்லாததாலும், இறந்த பிறகு சடலமாவதாலும், அந்த உடலை “நான்” என்னும் போதமாக, அறிவாக, ஞானமாக சொல்ல முடியுமா? 

உணர்வில்லாத ஒரு கட்டையைப் போல் உள்ள இந்த உடல், “நான் தான்” என்று பிரகாசித்து விளங்குவதாக சொல்லப்பட முடியுமா? இப்படி அவாந்தரமாக இடை இடையே தோன்றும் உடலைக் குறித்து, அதுவே “நான்” என்றும் எழும் தற்போதம், தான்மை என்றும், அகங்காரம் என்றும், அவித்தை, அறியாமை என்றும், மாயை என்றும், மாசு என்றும், ஜீவன் என்றும் பலவிதமாகச் சொல்லப் படுகிறது. இதைப் பற்றி விசாரிக்காமல் இருக்கலாமா? இதை விசாரித்து உணர்ந்து உய்வதற்காகத்தான் அல்லவா, விமோசனம் பெறுவதற்காகத்தான் அல்லவா, சகல சாத்திரங்களும் மறை நூல்களும் ஏற்பட்டு, அந்த தற்போதத்தின், “தான்மையின்” நாசமே தான் முக்தி என்று கோஷிக்கின்றன, பறை சாற்றுகின்றன!

எனவே, சடலமான உடலை ஒரு சடலமாக இருக்க விட்டு, வாக்கினாலும் “நான்” என்னும் சொல்லைக் கூடச் சொல்லாமல், “இப்போது ‘நான்’ என்று எழுவது எது?” என்று கூர்மையாக விசாரித்தால், அப்போது ஹ்ருதயத்தில், உள்ளத்தில், “நான் நான்” என்னும் சப்தமில்லாமல் ஒரு வித ஸ்புரிப்பு, ஒளிர்வு பிரகாசிக்கும். அதாவது துண்டு துண்டாகவும்  பலப்பலவாகவும் இருந்த நினைவுள் எல்லாம் போய், வரையறை இல்லாத அகண்டமாகவும், ஒன்றே ஒன்றாகவும், ஒரு பிரக்ஞை உணர்வு மட்டும் தனக்குத் தானே தோற்றிக் கொண்டு இருக்கும்.  அதனை விடாமல் சும்மாயிருந்தால், அது “உடலே நான்” என்னும் அகங்கார ரூப ஜீவ போதத்தை, தனிப்பட்ட உணர்வை முற்றிலும் நாசப்படுத்தி, கர்ப்பூரத்தில் பற்றிக் கொண்ட நெருப்பு போல முடிவில் தானும் சாந்தமாகி விடும், அமைதியாகி விடும். இதுவே மோக்ஷம் என்று, முக்தி என்று, பெரியோர்களாலும், மறை நூல்களாலும் சொல்லப்படுகிறது.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

 

 

விசார சங்கிரகம் - சுய விசாரணை (4)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (2)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!