விசார சங்கிரகம் – சுய விசாரணை (18)
(18)
பக்தர்:
ஆன்ம ஜோதி ஒன்றே ஒன்று, பகுதிகள் இல்லாதது, மொத்தமானது, சுய பிரகாசமானது. அந்த ஆன்ம ஜோதியில், கற்பனைகளான மூன்று நிலைப்பாடுகளின் அனுபவங்கள், மூன்று சரீரங்கள் போன்றவை, எப்படி தோன்றுகின்றன? அவை அப்படி தோன்றினாலும், ஆன்மா மட்டுமே நிரந்தரமாக நிலையாக இருக்கிறது என்பதை ஒருவர் எப்படி அறிவது?
|
உதாரணம் |
உதாரணத்தால் விளக்கப் படுவது |
1 | விளக்கு | ஆன்மா |
2 | கதவு | தூக்கம் |
3 | கதவு படி | மஹத் தத்வம் – இயற்கை அல்லது மகத்தான சக்தி |
4 | உட்புற சுவர் |
காரண சரீரம்; உண்மையான ஆன்மா எது என்று அறியாத அறியாமை; |
5 | கண்ணாடி | “நான்” என்னும் தனிப்பட்ட தான்மை உணர்வு |
6 | ஜன்னல்கள் | அறிந்து உணரும் ஐந்து புலன்கள் |
7 | உட்புற கூடம் | காரண சரீரம் வெளிப்படுத்தப் படும் ஆழ்ந்த தூக்கம் |
8 | நடுப்புற கூடம் | நுண்ணிய சரீரம் வெளிப்படுத்தப் படும் கனவு நிலை |
9 | வெளிப்புற கூடம் | ஸ்தூல சரீரம் வெளிப்படுத்தப் படும் விழிப்பு நிலை |
ஆன்மா என்னும் விளக்கு (1) உட்புற கூடத்தில் தானே பிரகாசித்து விளங்குகிறது. உட்புற கூடம் என்பது அறியாமையை (4) உட்புற சுவராகவும், தூக்கத்தை கதவாகவும் (2) கொண்ட காரண சரீரமாகும்.
காலம், கர்மா பொன்றவற்றால் நிர்ணயிக்கப்பட்டு, உயிர்நிலையான முக்கிய சக்தியால், தூக்கக் கதவு திறக்கப் படும் போது, கதவுப் படியான இயற்கை அல்லது மகத்தான சக்திக்கு அருகில் பொருத்தப் பட்டிருக்கும் தான்மைக் கண்ணாடியில் (5), ஆன்மாவின் ஒரு பிரதிபிம்பம், ஏற்படுத்தப் படுகிறது.
இவ்வாறு தான்மைக் கண்ணாடி கனவு நிலையான (8) நடுப்புற கூடத்தை ஒளிப் படுத்துகிறது. அதோடு, ஐந்து புலன்களான (6) ஜன்னல்கள் மூலமாக, விழிப்பு நிலையான வெளிப்புற கூடத்தை ஒளிப் படுத்துகிறது.
மறுபடியும், காலம், கர்மா பொன்றவற்றால் நிர்ணயிக்கப்பட்டு, உயிர்நிலையான முக்கிய சக்தியால், தூக்கக் கதவு மூடப்படும் போது, விழிப்புடனும் கனவுடனும் சேர்த்து தனிப்பட்ட தான்மை உணர்வு முடிவடையும் போது, ஆன்மா மட்டுமே எப்போதும் பிரகாசித்து விளங்குகிறது.
ன்மா எப்படி நிலையாக இருக்கிறது என்றும், எப்படி ஆன்மாவுக்கும் தான்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும், எப்படி மூன்று நிலைப்பாடுகளின் அனுபவங்கள், மூன்று சரீரங்கள் போன்றவை தோன்றுகின்றன என்றும், இப்போது அளிக்கப் பட்ட இந்த உதாரணம் விளக்குகிறது.
~~~~~~~~
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara
~~~~~~~~
குறிப்பு :
“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.
அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.