நல்ல தரமான உணவு
திருமதி பிக்கட் சென்னையிலிருந்து மீண்டும் வந்தார். உணவு விதிகளைப் பற்றி சில கேள்விகள் கேட்டார்.
பக்தர்.: ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு எந்த விதமான உணவு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன?
மகரிஷி.: வரம்புக்குட்பட்ட சாத்வீகமான நல்ல தரமுள்ள உணவு.
பக்தர்.: சாத்வீகமான உணவு என்ன?
மகரிஷி.: ரொட்டி, பழங்கள், காய்கறிகள், பால், போன்றவை.
பக்தர்.: வட இந்தியாவில் சிலர் மீன் சாப்பிடுகிறார்கள். அப்படி செய்யலாமா?
மகரிஷி.: (மகரிஷி அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.)
பக்தர்.: ஐரோப்பியர்களாகிய நாங்கள் ஒரு விதமான உணவு வகையில் பழக்கப்பட்டுள்ளோம். உணவு முறை மாறினால் அது உடல் நலனை பாதிக்கிறது; மனதை வலுவிழக்கச் செய்கிறது. உடல் நலனை கவனித்துக் கொள்வது அவசியமில்லையா?
மகரிஷி.: அவசியம் தான். உடல் வலுவிழக்கும் போது மனம் வலுவடைகிறது.
பக்தர்.: எமது வழக்கமான உணவு இல்லாமல் போகும்போது, எமது உடல் நிலை அவதிப்படுகிறது; மனம் வலுவிழக்கிறது.
மகரிஷி.: மன வலிமை என்பதில் என்ன குறிப்பிடுகிறீர்கள்?
பக்தர்.: உலகத்துடன் உள்ள பந்தத்தை அகற்றும் சக்தி.
மகரிஷி.: உணவின் தரம் மனதை பாதித்து அதன்படி விளைவுகளைத் தூண்டுகிறது. உண்ட உணவிலிருந்து மனம் உண்கிறது.
பக்தர்.: உண்மையாகவா! ஐரோப்பியர்கள் சாத்வீக உணவுக்கு மட்டுமே எப்படி பழக்கப்படுத்திக் கொள்வது?
மகரிஷி.: (திரு எவன்ஸ் வென்ட்ஸ் என்பவரைச் சுட்டிக்காட்டி) நீங்கள் எமது உணவை ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். அதன் காரணமாக நீங்கள் அசௌகரியமாக உணர்கிறீர்களா?
திரு எவன்ஸ் வென்ட்ஸ்: இல்லை. ஏனெனில் எனக்கு பழக்கமாகிவிட்டது.
பக்தர்.: அப்படி பழக்கப்படாமல் உள்ளவர்களைப் பற்றி என்ன?
மகரிஷி.: பழக்கம் என்பது சுற்றுப்புறத்துடன் அனுசரித்து நடப்பது தான். மனம் தான் முக்கியம். உண்மை என்னவென்றால், சில உணவுகளை மட்டுமே நல்லதென்றும், ருசியானதென்றும் எண்ண மனம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் சைவ உணவிலும் அசைவ உணவிலும் அதே அளவு கிடைக்கும். ஆனால் மனம், அதற்கு பழக்கமானதும், அது ருசியாக இருப்பதாக எண்ணுவதுமான உணவைத் தான் விரும்புகிறது.
பக்தர்.: ஞானிக்கும் இதே விதமாக விதி முறைகள் உள்ளனவா?
மகரிஷி.: இல்லை. ஞானி நிதானமாக, நிலையாக உள்ளார். அவர் சாப்பிடும் உணவால் பாதிக்கப் பட மாட்டார்.
பக்தர்.: மாமிச உணவை தயார் செய்வது ஒரு உயிரைக் கொல்வது இல்லையா ?
மகரிஷி.: அகிம்சை, இன்னா செய்யாமை, யோகிகளின் கட்டுப்பாட்டு முறைகளில் மிக முக்கியமாக நிற்கிறது.
பக்தர்.: தாவரங்களில் கூட உயிர் உள்ளது.
மகரிஷி.: நீங்கள் உட்காரும் பலகைகளும் அதே போல் தான்!
பக்தர்.: நாங்கள் சிறிது சிறிதாக சைவ உணவுக்கு பழக்கப் படுத்திக் கொள்ளலாமா?
மகரிஷி.: ஆமாம். அது தான் வழி.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 31, 1935
உரையாடல் 22.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா