குரு என்பவர் யார்
திரு எவன்ஸ் வென்ட்ஸ் இன்னொரு நாள் தொடர்ந்து கேட்டார்: “ஆன்மீக குருவென்று பல பேரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாமா?”
மகரிஷி.: குரு என்பவர் யார்? சொல்லப்போனால், அவர் ஆன்மா தான். மனதின் வளர்ச்சியின் நிலைப்படிகளுக்கு தகுந்தபடி, ஆன்மா வெளிப்புறத்தில் குருவாக உருக்கொள்கிறது. மிகவும் புகழ்பெற்ற புனிதர் அவதூதர், தமக்கு 24 ஆசான்கள் இருந்ததாக சொன்னார். ஒருவரிடமிருந்து யாராவது ஏதாவது கற்றுக் கொண்டால், அவர் குருவாகிறார். சில சமயங்களில், அவதூதர் விஷயத்தில் இருந்தது போல, குரு உயிரற்ற பொருளாகக் கூட இருக்கக் கூடும். கடவுள், குரு, ஆன்மா, இவை எல்லாம் ஒன்றே தான்.
ஆன்மீக மனம் கொண்ட ஒரு மனிதர், கடவுள் எங்கும் வியாபித்துள்ளவர் என்று நினைத்தவாறு, கடவுளை தன் குருவாக ஏற்றுக் கொள்கிறார். பிறகு, கடவுள் மனிதருக்கு ஒரு சொந்த குருவுடன் தொடர்பை கொண்டு வருகிறார்; மனிதர் குருவை எல்லாவற்றிலும் உள்ள பரம்பொருளாக கண்டுகொண்டு அங்கீகரித்துக் கொள்கிறார். இறுதியில், குருவின் அருளினால், அதே மனிதர், ‘தமது ஆன்மா தான் உண்மை அகநிலை, மற்ற எதுவும் இல்லை’, என்று உணர வைக்கப் படுகிறார். இந்த விதமாக, ஆன்மாவே தான் குரு என்று மனிதர் கண்டுகொள்கிறார்.
பக்தர்.: பகவான் சீடர்களுக்கு தீக்ஷை அளிக்கிறாரா?
மகரிஷி மௌனமாக இருந்தார்.
அதன் பிறகு, பதில் சொல்ல பக்தர்களில் ஒருவர் தாமே பொறுப்பேற்றுக் கொண்டு சொன்னார், “மகரிஷி தமது ஆன்ம சுயநிலைக்கு வெளிப்புறத்தில் இருப்பதாக யாரையும் காண்பதில்லை. எனவே அவருக்கு சீடர்கள் கிடையாது. அவரது பேரருள் எங்கும் வியாபித்து விளங்குகிறது. அவர் தமது அருளை ஆழ்ந்த மௌனத்தில், தகுதியுள்ள எந்த மனிதருக்கும் வழங்குகிறார்.”
பக்தர்.: புத்தகக் கல்வி ஆன்ம ஞானத்திற்கு உதவுமா?
மகரிஷி.: ஒருவரை ஆன்மீக மனமுள்ளவராக ஆக்கும் வரை தான் உதவும்.
பக்தர்.: புத்தி எவ்வளவு தூரம் உதவுகிறது?
மகரிஷி.: புத்தியை தான்மையில் மூழ்க வைத்து, தான்மையை ஆன்மாவில் மூழ்க வைக்கும் வரை தான் உதவும்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 2, 1935
உரையாடல் 23.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா