How to discover the nature of mind
27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி
25 B. மனம் என்பது என்ன

மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

பக்தர்: மனதின் தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது, மனதின் இறுதியான, அடிப்படையான காரணம், அல்லது அதன் வெளிப்பாட்டுக்கு அடிப்படையான நிலை, அதை எப்படி கண்டுபிடிப்பது? 
மகரிஷி: எண்ணங்களை, அவற்றின் முக்கியத்துவத்தின்படி வரிசைப்படுத்தினால், ‘நான் – எண்ணம்’ தான் எல்லாவற்றிலும் முக்கியமான எண்ணம். ஒவ்வொரு கருத்தும், எண்ணமும், ஒருவரின் எண்ணமாகவே எழுவதாலும், அது தான்மை உணர்வை விட்டு சார்பின்றி தனியாக விளங்காததாலும், ‘ஒரு மனிதரின் தனித் தன்மை’ (Personality-idea) அல்லது எண்ணம் தான் மற்ற எல்லா எண்ணங்களுக்கும் தண்டு அல்லது வேர்  போல இருக்கிறது. எனவே, தான்மை தான் எண்ணங்களின் செயல்பாடுகள் மூலமாக காட்சிப் படுத்துகிறது.

இரண்டாவதும் மூன்றாவதுமான நபர்கள், முதலாவதான நபரைத் தவிர வேறு யாருக்கும் தோன்றுவதில்லை. எனவே, முதல் நபர் தோன்றிய பிறகே அவர்கள் தோன்றுகின்றனர். அதனால், மூன்று நபர்களும் ஒருங்கே ஒன்றாக எழுந்து மூழ்குவதாகத் தோன்றுகிறது. எனவே, ‘நான்’ அல்லது தனித்தன்மையின் இறுதியான, அடிப்படையான காரணத்தைத் தடம்பின்பற்றி தேடுங்கள்.  ‘நான்’ என்னும் கருத்து, உடலுடன் இணைந்த ஒரு தான்மைக்குத் தான் எழுகிறது; அது ஒரு உடலுடன் அல்லது உயிரினத்துடன் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும். அதற்கு உடலில் ஒரு இருப்பிடம் உள்ளதா? அல்லது, வாக்கின் மையம் மூளையில் இருப்பது போல், அன்பு உணர்ச்சி மூளையில் இருப்பது போல்,  உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் அதற்கு ஒரு சிறப்பான உறவு அல்லது தொடர்பு உள்ளதா? அதே போல், ‘நான்’ என்பதற்கு மூளையிலோ, ரத்தத்திலோ, உள்ளுறுப்புகளிலோ, ஏதாவது மையம் இருக்கிறதா? 

எண்ணங்களின் உயிர், மூளையையும் முதுகெலும்பையும் சுற்றி இருப்பதாகத் தெரிகிறது. சரியான விதத்தில் கலந்த, உணவையும் காற்றையும் கொண்டு செல்லும் ரத்தம், அவற்றினுள் பாய்ந்து, அவற்றிக்கு உணவளிக்கிறது. பின்னர், அது நரம்புப் பொருளாக மாற்றப்படுகிறது. இது போல்,  சுற்றோட்டம், சுவாசம், உணவூட்டம் முதலியவை, மேலும் ஜீவ சக்தி, இவையெல்லாம் உள்பட, தாவர உயிரானது, அங்க ஜீவியின்  சாராம்சம் என்றோ, அல்லது அதன் மையத்தில் உறைவதாகவோ சொல்லப்படுகிறது. எனவே, மனம் என்பது ஜீவ சக்தியின் வெளிப்பாடாக கருதப்படலாம். மேலும் அது இதயத்தில் உறைவதாகவும் கருதப்படலாம். 

பக்தர்: மனதை அகற்றி அதன் இடத்தில் உள்ளுணர்வு அல்லது இயலுணர்வை வளர்ப்பதற்கு, மனமும் இயலுணர்வும் இல்லாத ஒரு நடுநிலையை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு தனிப்பட்ட நிலைப்படிகள் உள்ளனவா? அல்லது மனச் செயல்பாடு இல்லாத போது, அதுவே ஆன்ம ஞானம் ஆகுமா?  
மகரிஷி: சாதகருக்கு, பயிற்சி செய்பவருக்கு, தனித்துவமான இரண்டு நிலைப்படிகள் உள்ளன.  மனதின் செயல்பாடுகளோ, அல்லது ஆன்ம சொரூப உணர்வோ இல்லாத நடுநிலை, அதாவது, தூக்கம், மீளா உணர்விழந்த நிலை, மயக்கம், பித்துநிலை, போன்ற ஒரு நடுநிலை இருக்கிறது.

பக்தர்: முதல் பகுதியை எடுத்துக் கொண்டால், மனதை அகற்றுவது, அல்லது தனித்து இல்லாமல் இன்னொன்றுடன் ஒப்பு நோக்கியே காணத்தக்க உணர்வைக் கடந்து செல்வது எப்படி? 
மகரிஷி: மனம் தன்னியல்பாக சஞ்சலமானது. அதை சஞ்சலத்திலிருந்து, மன அலைவிலிருந்து விடுவிக்க ஆரம்பியுங்கள்; அதற்கு அமைதி கொடுங்கள்; கவனச் சிதறல்களில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்; உள்ளத்தின் உட்புறம் நோக்க பயிற்சி அளியுங்கள்; இதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். இது, வெளிப்புற உலகை அசட்டைச் செய்வதின் மூலமாகவும், மன அமைதிக்கு ஏற்படும் தடங்கல்களை நீக்குவதின் மூலமாகவும்,  செய்யப்படுகிறது.  

பக்தர்: மனதில் உள்ள சஞ்சலத்தை நீக்குவது எப்படி? 
மகரிஷி: வெளிப்புற சகவாசங்கள், தன்னைத் தவிர்த்த மற்ற பொருட்களுடன் தொடர்புகள் – இவை மனதை சஞ்சலப்பட வைக்கின்றன. ஆன்மாவைத் தவிர்த்த பொருட்களில் உள்ள நாட்டத்தை இழத்தல், வைராக்கியம், முதல் படியாகும். பிறகு உள்நோக்கு, ஒருமுகச் சிந்தனை, இவற்றின் பழக்கங்கள் தொடரும். இவை, வெளிப்புற புலன்களையும், உட்புற திறன்கள் முதலியவற்றையும் கட்டுப்படுத்தல் என்று வர்ணிக்கப்படுகின்றன.  இவை சஞ்சலமில்லாத மனமென்னும், பரிபூரண மோனநிலையில் முடிவுறும். 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 26.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி
25 B. மனம் என்பது என்ன
26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!