Who am I? How is it to be found?
25 B. மனம் என்பது என்ன
24. உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல்லை

நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி கேட்டார்:

“நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?”

மகரிஷி.: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உடலும் (annamaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை.

இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் (manomaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை.

அடுத்த படி  இந்த கேள்வியிடம் எடுத்துக் கொண்டு செல்கிறது : “எங்கிருந்து எண்ணங்கள் எழுகின்றன?

எண்ணங்கள் தன்னிச்சையானவை, மேலோட்டமானவை, அல்லது பகுப்பாய்வு சார்ந்தவையாக உள்ளன. அவை புத்தியில் இயங்குகின்றன. அப்படியென்றால், யார் அவற்றை அறிகிறார்? எண்ணங்களின் உள்ளமையும், அவற்றின் தெளிவான கருத்துக்களும், அவற்றின் இயக்கங்களும் மனிதருக்கு தெளிவாகத் தெரிய வருகிறது. இந்த பகுப்பாய்வு, ‘எண்ணங்களின் உள்ளமையையும் அவற்றின் வரிசை முறையையும் காண்பவராக மனிதரின் தனித்துவம் இயங்குகிறது’, என்ற தீர்மானத்திற்கு வழிவகுக்கிறது. இந்த தனித்துவம் தான் தான்மை (ego), அல்லது சாதாரணமாக மக்கள் சொல்வது போல, ‘நான்’. புத்தி (Vijnanamaya kosa) என்பது ‘நான்’ என்பதன் உறை தானேயன்றி,  உண்மை ‘நான்’ அல்ல.

மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது இந்த கேள்விகள் எழுகின்றன :

“இந்த ‘நான்’ என்பது யார்? அது எங்கிருந்து வருகிறது? தூக்கத்தில் ‘நான்’ எதையும் அறியவில்லை. அது எழும் அதே சமயத்தில், தூக்கம் கனவாகவோ, விழிப்பாகவோ மாறுகிறது. ஆனால் தற்போது நான் கனவைப் பற்றி கவலைப் படவில்லை. இப்போது இந்த விழிப்பு நிலையில், நான் யார்?

நான் தூக்கத்திலிருந்து தோன்றியிருந்தால், பின் ‘நான்’ அறியாமையால் மூடப்பட்டிருந்தது. இத்தகைய அறிவில்லாத ‘நான்’, மறை நூல்கள் உறைப்பதும், சான்றோர்கள் உறுதிப்படுத்துவதுமானதாக இருக்க முடியாது. ‘நான்’ தூக்கத்திற்கும் கூட அப்பால் உள்ளேன். ‘நான்’ இப்போது, இங்கு, இருக்க வேண்டும்; அதோடு மட்டுமில்லாமல், நான் தூக்கத்திலும் கனவுகளிலும் கூட, அந்த நிலைகளின் குணங்கள் இல்லாமல் எப்போதுமே இருந்து வந்த ‘நான்’ தான். எனவே ‘நான்’ இந்த மூன்று நிலைகளுக்கும் அடிப்படையான, ஆனந்த நிலையையும் கடந்த (anandamaya kosa), குறிப்பிட்ட குணங்கள் இல்லாத, கீழ்படிவமாக இருக்க வேண்டும். “

சுருங்கச் சொல்லப்போனால், ‘நான்’ ஐந்து உறைகளுக்கும் அப்பாற்பட்டதாகும். அடுத்தது, உண்மையான நான் என்று இல்லாத எல்லாவற்றையும் நிராகரித்தபின், மீதம் உள்ள பொருள் தான் ஆன்மா, உண்மை-உணர்வு-ஆனந்தம் (Sat-Chit-Ananda).

பக்தர்.: அந்த ஆன்மாவைத் தெரிந்துகொள்வது, அல்லது உணர்வது எப்படி? 
மகரிஷி.: தற்போதைய சார்பியலான தளத்தைக் கடந்து செல்லுங்கள். ஒரு தனி வஸ்து (ஆன்மா) தன்னை விட்டு அகன்று இருக்கும் (ஆன்மா அல்லாத) வேறொன்றை அறிந்துக் கொள்வது போல தோன்றுகிறது. அதாவது, பார்ப்பவர் பார்க்கப்படும் பொருளை அறிகிறார்.  பார்ப்பவர் ‘த்ரிக்’ (drik), பார்க்கப்படும் பொருள் ‘த்ரிஸ்யா’ (drisya). 

இவை இரண்டிற்கும் அடிப்படையாக ஒரு ஒருமைப்பாடு இருக்க வேண்டும்; அது தான் ‘தான்மை’ (ego) என எழுகிறது.  இந்த தான்மை, அறிவு என்ற தன்மையைக் கொண்டது. அறிவற்றது (உணர்வற்ற பொருள்) என்பது அறிவின் மறுப்பு தான். எனவே, அடிப்படையாக உள்ள சாராம்சம், காண்பவரை ஒத்ததே தவிர, காணப்படுவதை ஒத்தது இல்லை.

காணப்படும் பொருளெல்லாம் மறையும் வரை காண்பவரான நானைப் பார்த்தவாறு இருந்தால், காண்பவர் மேலும் மேலும் நுட்பமாக ஆவார்; பின்பு, அறுதியான காண்பவர் மட்டும் மிஞ்சி நிற்பார். இந்த செயல்முறை “புறநிலை உலகு மறைவது” (drisya vilaya) என்று அழைக்கப் படுகிறது.  

பக்தர்.: காணப்படும் பொருள் (drisya) ஏன் நீக்கப்பட வேண்டும்? காணப்படும் பொருளை அது இருப்பது போலவே வைத்துக் கொண்டே உண்மைத் தன்மையை உணர முடியாதா? 
மகரிஷி.: முடியாது. காணப்படுவதை நீக்குதல் என்றால், காண்பவருக்கும் காணப்படும் பொருட்களுக்கும் இருப்பதாகத் தோன்றும் வெவ்வேறு தனித்துவங்களை நீக்குதல் என்று அர்த்தம்.  காணப்படுவது பொய். ‘தான்மை’ உள்பட, காணப்படுபவை எல்லாம் பொருட்கள். உண்மையில்லாததை நீக்கிய பிறகு, ‘உண்மை’ மட்டுமே எஞ்சி வாழ்கிறது.

ஒரு கயிறு பாம்பென்று தவறாக கருதப்பட்டால், உண்மை வெளிப்படுத்தப் பட, அது பாம்பென்னும் தவறான கருத்தை நீக்கினால் போதும். இத்தகைய விலக்குதல் இல்லாமல், உண்மை வெளிப்படாது. 

பக்தர்.: புறநிலை உலகு மறைவதை எப்போது எப்படி விளைவிக்கிறது? 
மகரிஷி.: சார்பியலான நான், அதாவது மனம், நீக்கப்பட்ட பின்பு அது முடிவடையும். மனம் தான் காண்பவரையும் காணப்படும் பொருளையும் உருவாக்குகிறது; அது தான் ‘இரண்டு’ என்னும் கருத்துக்குக் காரணம். எனவே, அது தான் ‘வரையறுக்கப்பட்ட ஆன்மா’ என்ற தவறான கருத்துக்கும், இந்த பிழையான கருத்தால் விளையும் துயரத்திற்கும் காரணம்.  

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 25.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

25 B. மனம் என்பது என்ன
24. உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல்லை
25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!