திடமான ஞானம்
திரு எல்லப்பச் செட்டியார் என்னும் செல்வாக்கான இந்து, சென்னை மாநிலத்தின் சட்டமியற்றும் மன்றத்தின் உறுப்பினர் ஆவார். அவர் கேட்டார்: ‘கேட்பதனால் பிறக்கும் ஞானம் திடமில்லை; ஆனால் தியானத்தால் பிறக்கும் ஞானம் திடமானது’ – என்று ஏன் சொல்லப்படுகிறது?”
மகரிஷி.: அதற்கு மாறாக, ‘கேள்விப்பட்ட (பரோக்ஷ) ஞானம் திடமில்லை; ஆனால் தனது சொந்த அனுபவத்தால் பிறக்கும் (அபரோக்ஷ) ஞானம் திடமானது’ என்று சொல்லப்படுகிறது.
மேலும், கேட்டு அறிந்துக் கொள்வது உண்மைத் தத்துவத்தின் பொருளை அறிவுப்பூர்வமாக புரிந்துக் கொள்ள உதவுகிறது என்றும், ஆழ்நிலை தியானம் புரிந்துக் கொண்டதை தெளிவாக்குகிறது என்றும், இறுதியில் அந்த தியானம் உண்மை தத்துவத்தின் அனுபவ உணர்தலைக் கொண்டு வருகிறது என்றும், சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், ‘இந்த எல்லா ஞானமும் திடமில்லை; ஞானம் உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் அவ்வளவு தெளிவாகவும், அந்தரங்கமாகவும் இருக்கும்போது தான் திடமானது’, என்றும் சொல்கிறார்கள்.
கேட்டு அறிந்துக் கொள்வது மட்டுமே போதும் என்று சிலர் உறுதியளிக்கிறார்கள். ஏனெனில், தகுதி வாய்ந்த ஒருவர், ஒருவேளை ஏற்கனவே தமது முந்தைய அவதாரங்களில் தகுதி பெற்றதால், ஒரு முறை கேட்டவுடனேயே ஆன்ம உணர்வு பெற்று, ஆழ்ந்த அமைதியில் உறைகிறார். ஆனால், இத்தகைய தகுதி பெறாத ஒருவர், ஆன்ம மோன நிலையில் ஆழ்வதற்கு முன்னால், முன்பு குறிப்பிடப்பட்ட நிலைப்படிகளில் எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 31, 1935
உரையாடல் 21.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா